பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்(பி.டி.வி.) தாக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானையும், மதகுரு தஹிருல்காத்ரியையும் கைது செய்ய தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது, பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நீக்க வேண்டும் என கோரி, கடந்த 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 1-ந்தேதி இம்ரான்கான், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக்அமைப்பின் மதகுரு தாகிருல் காத்ரி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பி.டி.வி. அலுவலகத்தில் நுழைந்து தாக்கினர்.

ஏறக்குறைய இரு அமைப்பைச் சேர்ந்த 500 ஆதரவாளர்கள் பி.டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அப்போது அந்த சேனலின் ஒளிபரப்பும் சில மணிநேரங்களுக்கு நிறுத்தப்பட்டது. ராணுவம் தலையிட்டு, கூட்டத்தை கலைத்தபின், ஒளிபரப்பு மீண்டும் தொடங்கியது.

இது தொடர்பாக பி.டி.வி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இம்ரான்கான், காத்ரி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 68 பேரையும் நேரில் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் பல முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

மேலும், அவர்களை கைது செய்ய இதற்கு முன் பிறக்கப்பிட்ட உத்தரவையும் போலீசார் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத போலீசாரை நீதிபதி கவுசர் அப்பாஸ் ஜெய்தி கடுமையாகக் கண்டித்தார். நவம்பர் 17-ந்தேதிக்குள் இம்ரான்கான், மதகுரு காத்ரி மற்றும் ஆதரவாளர்கள் 68 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.