பாகிஸ்தானில் பெட்ரோல் லாரி வெடித்துச் சிதறி விபத்து - பலி எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு
பஞ்சாப் மாகாணாம், பஹாவல்பூரில், பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து கசியும் பெட்ரோலை பிடித்துச் செல்ல லாரி அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் லாரியைச் சூழ்ந்து கொண்டு பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் லாரி வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில் பெட்ரோல் சேகரித்துக் கொண்டிருந்த 123-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த 25 பேர் மாலை உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 148 ஆக அதிகரித்துள்ளது,
லாரியில் இருந்து பெட்ரோல் சேகரித்துக் கொண்டிருக்கம் வேளையில், சிலர் புகைபிடித்துக் கொண்டிருந்ததாகவும், இதனால், விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் பலர், மிக மோசமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்துக்கு காரணம் குறித்து, பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.