அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்பட்டால் அது நியாயமான தேர்தலாக இருக்காது என குடியரசுக் கட்சி வேட்பாளர் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, இது அமெரிக்க மக்களுக்கு எதிரான நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில், Donald Trump-ம் போட்டியிடுகின்றனர்.
அவர்களுக்கு இடையே நேற்று இறுதிகட்ட நேரடி விவாதம் நடைபெற்றது. இருவரும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது நியாயமான தேர்தலாக இருக்காது என்றும் Trump தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒபாமா, குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் தெரிவிக்கவேண்டும் என கூறினார். Trump கூறியதை அலட்சியப்படுத்த முடியாது என்றும், அமெரிக்க மக்கள் மனதில் தவறான சந்தேகங்களை விதைப்பதாகவும் அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
