“எரியும் தீயில் நெய் ஊற்றிய நவாஸ் ஷெரீப்” - புர்ஹான் வானியை புகழ்ந்து பேசி உசுப்பேற்றிய கொடுமை!
ஹஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதியும், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான புர்ஹான் வானியின் முதலாம்ஆண்டு நினைவு நாளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புகழ்ந்து பேசிய காஷ்மீர் மக்களை உசுப்பேற்றியுள்ளார்.
ஹஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானியை இந்திய ராணுவத்தினர் கடந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக கலவரம் நீடித்தது. அதை முடிவுக்கு கொண்டு வர இந்திய ராணுவத்தினரும், காஷ்மீர் மாநில போலீசாரும் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், புர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே, காஷ்மீர் மாநிலத்தில் இன்டர்நெட் இணைப்பை ரத்து செய்து, சமூக ஊடங்களை போலீசார் முடக்கினர்.
இதனால், தேவையில்லாத வதந்திகள் பரபரப்படுவது தடுக்கப்படும் என்று முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்து. துணை ராணுவப்படையினர், போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பிரிவினைவாதிகளும் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான சயத் அலி ஷா கிலாணி, மிர்வாஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் மக்களை பேரணிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், புர்ஹான் வானிக்கு அஞ்சலி செலுத்தி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசிய பேச்சு, ஜம்முகாஷ்மீர் மக்களை கொம்பு சீவிவிடுவதுபோல் இருக்கிறது. அவர் பேசியதாவது-
புர்ஹான் வானியின் மறைவு காஷ்மீர் மாநிலம் சுதந்திரம் அடைவதற்கான போராட்டத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. காஷ்மீர் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை ஏவிவிட்டு, இந்தியா ஒருபோதும் காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கிவிட முடியாது. காஷ்மீர் மக்கள் தங்களின் சுதந்திரப் போராட்டத்தை ஒரு தீர்க்கமான எண்ணத்துடன் நிதானமாக முன்னெடுத்துச் சென்று வருகிறார்கள்.
காஷ்மீர் மக்கள் சுயாட்சி பெற்று சுதந்திரமாக செயல்படத் தேவையான அரசியல்ரீதியான, பாதுகாப்பு ரீதியான ஆதரவையும், தார்மீக ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளிக்கும். காஷ்மீர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காஷ்மீர் மக்களின் சுயாட்சி கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.