பெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயிக்கு, உலக வங்கி தலைவர் பதவி கிடைக்க உள்ளது. இதற்கான தேர்வுக் குழு உறுப்பினரான இவாங்கா ட்ரம்ப் உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார்.
தற்போது உலக வங்கி தலைவர், ஜிம் யங் கிம், இம்மாத துவக்கத்தில், திடீரென்று, பிப்ரவரியில் தாம் பதவி விலகப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது. தேர்வுக்குழு பரிந்துரைக்கும் நபரை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ, டிரம்பிற்கு அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினரான, இவாங்கா டிரம்ப், உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார். 'இந்திரா நுாயி, ஓர் வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறார்' என, இவாங்கா டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, இந்திரா நுாயி, உடனடியாக கருத்து ஏதும்தெரிவிக்க வில்லை என்ற போதிலும், அவரை, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா என்பது கேள்வியாகஉள்ளது. இந்திரா நுாயியை, தன் மகள் பரிந்துரைத்த காரணத்தாலேயே, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா எனவும் தெரியவில்லை.
இப்பதவிக்கு, இந்திரா நுாயி உடன், மேலும் சிலர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்காவின், சர்வதேச விவகாரங்களுக் கான கருவூலத் துறை கூடுதல் செயலர், டேவிட் மால்பாஸ் முக்கியமானவர். இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இவருடன், டிரம்பின் மற்றொரு விசுவாசி, ரே வாஷ்பர்ன் பெயரும், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இறுதியில் யார் வெல்வார் என்பது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
Last Updated 17, Jan 2019, 8:28 AM IST