Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கும்...!! பிரதமர் மோடி ஆவேசம்..!!

பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது என தேசத்திற்கு உறுதி அளிக்க விரும்புகிறேன், எங்கள் வீரர்கள் சீனர்களுடன் போராடி இறந்ததை அறிந்து நாடு பெருமிதம் கொள்ளும்,

Indian prime minister modi warning china
Author
Delhi, First Published Jun 17, 2020, 4:37 PM IST

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் எல்லையில் என்ன நடந்தாலும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது எனவும், தகுந்த பதிலடி கொடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய-சீன  எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, மே-22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவம் எல்லை மீறி விட்டதாக கூறி சீனா ஏராளமான படைகளை குவித்தது, அதைத்தொடர்ந்து இந்திய ராணுவமும் படைகள் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தணித்துக் கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்த நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

Indian prime minister modi warning china

அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல் சீன தரப்பிலும் 35 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவ வீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் நடந்த  அசம்பாவிதம் குறித்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்தார், இதனையடுத்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம் நரவானே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தலைவர்களுடன் எல்லை விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் எல்லையில் கூடுதல்  படைகளை குவிக்கவும், மேலும் எல்லை நிலைமைகளை தீவிரமாக கண்காணிக்கவும் மோடி உத்தரவிட்டதாக தெரிகிறது. மேலும் எல்லை நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

Indian prime minister modi warning china

எல்லையில் சீனா செய்யும் எல்லாவற்றையும் இந்தியா வேண்டிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனவும் தகுந்த பதிலடி கொடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது, எப்போதும் பதிலடி கொடுப்பதை இந்தியா நிறுத்தாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக மாநில முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போது, எல்லையில் உயிர்நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய அவர், லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புகளுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் தியாகம் வீணாகாது, அமைதியை நேசிக்கும் இந்தியா பொருத்தமான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது என தேசத்திற்கு உறுதி அளிக்க விரும்புகிறேன், எங்கள் வீரர்கள் சீனர்களுடன் போராடி இறந்ததை அறிந்து நாடு பெருமிதம் கொள்ளும், சீனா சொல்வதுபோல நாங்கள் யாரையும் தூண்டிவிட மாட்டோம் ஆனால் நாங்கள் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையில் சமரசம் செய்யமாட்டோம்,  நேரம் வரும் போதெல்லாம்  இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் பலத்தையும், திறன்களையும் இந்தியா நிரூபித்துள்ளது. தியாகம் இந்தியாவின் தேசிய தன்மையில் உள்ளது.  வீரமும், தைரியமும் இந்தியாவின் தன்மை எனவும் மோடி எச்சரித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios