மும்பை குண்டு வெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவனை சந்தித்தார் மோடி… இஸ்ரேலில் நெகிழ்ச்சி சம்பவம்…
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பின்போது பெற்றோரை இழந்து அனாதையாக இஸ்ரேல் நாட்டு சிறுவனை பிரதமர் நரேந்தி மோடி சந்தித்த சம்பவம் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் தீவிரவாதிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் உள்ள நாரிமான் ஹவுஸ் என்ற ஐந்து மாடி கட்டித்தின்மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்த ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகியோரும் உயிரிழந்தனர்.
அவர்களிடம் வேலைக்காரியாக பணியாற்றிவந்த இந்தியப் பெண்ணான சான்ட்ரா சாமுவேல்ஸ் அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு வயது ஆண் குழந்தையான மோஷேவை மிக சாமர்த்தியமாக பாதுகாத்து அதன் உயிரை காப்பாற்றினார்.
தற்போது 11 வயதாகும் மோஷே தீவிரவாத தாக்குதலில் தனது பெற்றோரை பறிகொடுத்து விட்டு, இஸ்ரேல் நாட்டில் உள்ள தனது தந்தைவழி தாத்தா, பாட்டியிடம் வளர்ந்து வருகிறான்.
சிறுவன் மோஷேவின் உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ரா சாமுவேலை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு அவரை சிறப்பித்த இஸ்ரேல் அரசு அந்நாட்டின் கவுரவ குடியுரிமையையும் அளித்துள்ளது. இந்த சம்பவம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டு மக்களையும் நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது.