ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனிடம் பணம் பெற்றவர்கள் தான் என்னை எதிர்த்து போராட்டம் செய்கிறார்கள் என டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

தேர்தல் பிரசாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதுவரை நடந்த கருத்துக் கணிப்புகளில் டிரம்பைக் காட்டிலும், 7 புள்ளிகள் முன்னிலையுடன் ஹிலாரி இருந்து வருகிறார். இருப்பினும் ஹிலாரியை வீழ்த்தும் பொருட்டு டிரம்ப் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்.

எனக்கே வெற்றி

இந்நிலையில், கிளீவ்லாந்து நகரில் நேற்றுமுன்தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டார். தனது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசுகையில், “ நாம் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. அதிபர் தேர்தலில் நான் தான் வெற்றி பெறப் போகிறேன். மற்றவர்கள் யாரும் வெற்றிபெற வாய்ப்பில்லை.

ஹிலாரியிடம் பணம்

என்னை எதிர்த்தும், எனக்கு குற்றச்சாட்டுக்களைக் கூறும் பெண்கள், எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஹிலாரியால் அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் ஹிலாரியிடம் பணம் பெற்றுக்கொண்டு என்னை எதிர்க்கிறார்கள்.

பொறுப்பு ஏற்பாரா?

ஒமாவின் ஆட்சியை மேலும் 4 ஆண்டுகள் நீட்டிக்க விடக்கூடாது. ஹிலாரி 30 ஆண்டுகள் அரசியலில் இருந்தும் எதையும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஹிலாரியின் நிர்வாகத் திறமையின்மையால் தான், மத்திய ஆசியாவில் இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 32 நாடுகளில் பரவிவிட்டனர். உலகம் முழுவதும் நடந்த ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடந்த பேரழிவுகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் ஹிலாரி எப்போது பொறுப்பு ஏற்கப்போகிறார்? . இன்னும் 17 நாட்களில் அனைத்தும் மாறப்போகிறது.

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் ஊழல்வாதி ஹிலாரி கிளிண்டன்தான். பல நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாகப் பெற்று, சிறுபான்மையினர், பெண்களை அடக்கிவைக்கிறார் ஹிலாரி. ஆனால், நான் ஆட்சிக்கு வந்தால், தனிநபர் சுதந்திரம், மதசுதந்திரத்துக்கு முழுமையாக ஆதரவளிப்பேன்.

தில்லுமுல்லு

அமெரிக்காவில் உள்ள 3.4 கோடி வாக்களர்கள் இருப்பது சரியாகக் கணக்கிடப்படவில்லை. 18 லட்சம் இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. 28 லட்சம் வாக்காளர்கள் பல மாநிலங்களில் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இது தில்லுமுல்லு நிறைந்த தேர்தல், தேர்தல்முறை'' எனத் தெரிவித்தார்.