Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவுக்கு சீனாக்காரன் கொடுத்த பதிலடி..!! செங்குவில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவு..!!

இந்நிலையில்,சீனா அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செங்குவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Chinese retaliation against US, Order to close the embassy in Chengdu .
Author
Delhi, First Published Jul 24, 2020, 12:49 PM IST

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகங்களை மூட அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவும் அதற்கு பதிலடியாக செங்குவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு நகலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே சீனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில  ஆண்டுகளாகவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென்சீனக்கடல் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே  கடுமையான  மோதல் நிலவி வருகிறது. 

Chinese retaliation against US, Order to close the embassy in Chengdu .

இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதன் ஓருபகுதியாக ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்  மீண்டும் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மேலும் ஒரு சீன தூதரகத்தை மூடுவதாக தெரிவித்தது .அது குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக சீன தூதரகம் அமெரிக்காவில் உளவு பார்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதுதவிர சட்டவிரோத விஷயங்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே டெக்ஸாஸில் உள்ள  தூதரகத்தையும் மூட அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், சீன தூதரகத்தை மூடுவதற்கான உத்தரவு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை மீறும் செயல் என்றும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பெய்ஜிங் தகுந்த பதில் அளிக்கும் என்றும் எச்சரித்திருந்தார். 

Chinese retaliation against US, Order to close the embassy in Chengdu .

இந்நிலையில்,சீனா அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செங்குவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. துணைத் தூதரகம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் திட்டங்களை நிறுத்துவது குறித்தும் சில விதிமுறைகள் குறித்த தகவல்களையும்  சீன அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 21 அன்று சீனாவுக்கு எதிராக, ஒருதலைப்பட்சமாக, சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்த அமெரிக்கா, திடீரென்று எங்களுடன் ஹூஸ்டன் துணை தூதரகத்தை மூட வேண்டும் என கூறியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்கள், சர்வதேச உறவுகளில் பொதுவான விதிகள் மற்றும் சீன அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இது சீன அமெரிக்க உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது, எனவே சீனா தற்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கை  அமெரிக்காவின்  நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு  எதிரான, பொருத்தமான, மிகவும் அவசியமான பதிலடியாகும்.  தற்போது இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலை ஏற்பட அமெரிக்காவே  காரணம். எனவே அமெரிக்கா தனது தவறான முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீராக்கவும், தேவையான சூழ்நிலையை உருவாக்கவும், அமெரிக்கா முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம் என சீனா அந்த அறிக்கையில் கோரியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios