"சென்னை,மும்பை கடலில் மூழ்கும்" - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் பெரும் மோசமான பாதிப்புகள் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பூமியில் உயிரினங்கள் வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதாக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பாட்ஸ்மேன் பருவநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக சீனா, இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இதனால் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான வருடமாக கடந்த 2016ம் ஆண்டு இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த 2017ம் ஆண்டிலும் கடந்த ஆண்டைவிட அதிக வெப்பம் பதிவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் ஆசிய கண்டத்தில் உள்ள சீனா, பங்களாதேஷ் மற்றும் தென் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த உலக வெப்பமயமாதலாலும் பருவநிலை மாற்றத்தாலும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் 13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலோரப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
2005 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும். இவற்றில் மும்பை, கோல்கத்தா, சென்னை, ஜகர்த்தா, சூரத், பாங்காக், நகோயா, ஷியாமின் உள்ளிட்ட நகரங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.