சீனாவிலிருந்து உயர் கல்விக்காக அமெரிக்கா வரும் மாணவர்கள், அமெரிக்காவில் வந்து படித்துவிட்டு அவர்களது நாட்டுக்கு  திரும்பியவுடன், அமெரிக்காவுக்கு எதிராகவே செயல்படுகின்றனர் எனவே இதை இனி ஊக்கப்படுத்த முடியாது என கூறியிருந்தார். 

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், சீனாவில் இருந்து வந்து அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாவை திரும்பப் பெறப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூபே மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவியுள்ளது. இந்த வைரசால் உலக அளவில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட உலகளவில் 150க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் 17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனா மீது திரும்பியுள்ள நிலையில், வைரசுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதுமட்டுமின்றி தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும், ஹாங்காங் மீது சீனா கொண்டுவரவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையேயான வர்த்தகத்திலும் மோதல் தலைதூக்கியுள்ள நிலையில், சீனாவின் வளர்ச்சியை எந்த அளவிற்கு தடுக்க முடியுமோ, அந்த அளவிற்கு தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக உயர்கல்விக்காக சீனாவிலிருந்து அமெரிக்கா வரும் மாணவர்களுக்கான விசாவை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது அவர்கள் அனைவரையும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது ஆனாலும், அமெரிக்கா இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவிலிருந்து உயர் கல்விக்காக அமெரிக்கா வரும் மாணவர்கள், அமெரிக்காவில் வந்து படித்துவிட்டு அவர்களது நாட்டுக்கு திரும்பியவுடன், அமெரிக்காவுக்கு எதிராகவே செயல்படுகின்றனர் எனவே இதை ஊக்கப்படுத்த முடியாது என கூறியிருந்தார். 

சீன மாணவர்கள் அமெரிக்காவின் அறிவுசார் சொத்து திருட்டில் ஈடுபடுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இதுகுறித்து வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், சீனாவுடன் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. சீனாவால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சீனா மீது பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சீன மாணவர்களுக்கான விசாவை திரும்பப் பெறுவதுடன் உயர்கல்வி படிக்கும் மாணவர்களை திருப்பி அனுப்பப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உலகெங்கிலுமுள்ள திறமையான மாணவர்கள் மட்டும் அறிஞர்களை நாம் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளனர். கடந்த 2018 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் சீனாவில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 396 பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றுள்ளனர். அமெரிக்கா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் அது 36.1 சதவீதம் ஆகும். 2018ம் ஆண்டில் சீனாவில் இருந்து வந்த 3 லட்சத்து 69 ஆயிரத்து 548 மாணவர்கள் மூலம் அமெரிக்கா 15 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.