"5000 தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்குகள் முடக்கம்" - பாகிஸ்தான் அரசு நடவடிக்கை
சர்வதேச அளவில் பட்டியலில் இடம் பெறுவதை தவிர்க்க 5 ஆயிரம் தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் அரசு அதிரடியாக முடக்கி வைத்துள்ளது.
கடந்த 1989ம் ஆண்டு, சர்வதேச அளவில், நிதி நடவடிக்கை அதிரடிப்படை என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், 35 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
அமெரிக்காவில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த பயங்கர தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாத அமைப்புக்கு செல்லும் நிதியையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் தடை பட்டியலில் இடம் பெற்றால், ஒரு நாட்டால் கடன் வாங்கும் திறன் பாதிக்கப்படும்.
அந்த குறிப்பிட்ட நாட்டின் வங்கி அமைப்பு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுகிறது என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிடும். எனவே, இந்த அமைப்பு அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. அதில், தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் நிதி குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதையொட்டி, வெளிப்படையாக செயல்படும் தீவிரவாத அமைப்புகள், பெயர் மாற்றி புது பெயரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் என சுமார் 5 ஆயிரம் அமைப்புகளின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு ஆணையம் முடக்கி உள்ளது. இந்த வங்கி கணக்குகளில் ரூ.19,200 கோடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.