உங்களை வீழ்த்த 40 லட்சம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்… அமெரிக்காவை வாண்ட்டடா வம்புக்கிழுக்கும் வட கொரியா…
உங்களை வீழ்த்த 40 லட்சம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்… அமெரிக்காவை வாண்ட்டடா வம்புக்கிழுக்கும் வட கொரியா…
ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாணவர்கள், முதியவர்கள் என 40 லட்சம் பேர் அமெரிக்காவை எதிர்த்து போரிட தயாராக இருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகள் மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
அமெரிக்காவில் உள்ள குவாம் தீவை ஏவுகணை மூலம் தாக்குவோம் என வட கொரியா அறிவித்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் மோசமான தாக்குதல்களை எந்த நேரத்திலும் வட கொரியா சந்திக்கும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், வட கொரியா அரசு நடத்தும் பத்திரிகை இன்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அதனை எதிர்க்கொண்டு பழிக்குப் பழி வாங்குவதற்கு 3.47 மில்லியன் வீரர்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாணவர்கள், முதியவர்கள் என சுமார் 40 லட்சம் பேர் அமெரிக்காவை எதிர்த்து போரிட தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், வட கொரியா மீது அமெரிக்கா முன்மொழிந்த புதிய பொருளாதார தடைக்கு ஐ.நா சபை ஒப்புதல் அளித்துள்ளதால் கடந்த புதன்கிழமை அன்று வட கொரியா தலைநகரான பியோங்யாங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அமெரிக்காவை எதிர்த்து போரிடுவோம் என முழக்கங்கள் எழுப்பியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.