இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து எரிவாயு நிறுவனங்களில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர்களின் இருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து எரிவாயு நிறுவனங்களில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர்களின் இருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான நாடுகளில் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டது. அந்த வகையில் இலங்கை மீண்டெழ முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பால், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பசியால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாத இலங்கையில், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில் நாளொன்றுக்கு 7 மணி நேரங்கள் மின்வெட்டும் நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணை வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடும், பல மணி நேரங்கள் மின்வெட்டு நீடித்து வருகிறது. தற்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.170 க்கும் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எரிவாயு பொருட்கள் கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு சில நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

அந்த வகையில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்து நின்று கொண்டிருந்த இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்பில் நேற்று பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் நிலையம் முன் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் திடீர் என்று அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் கண்டி நகரில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வெயிலில் காத்திருந்த முதியவர் சுருண்டு விழுந்து இறந்தார். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.