தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் சாவு; இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதி...
கடலூர்
கடலூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஏழு வயது சிறுமி உள்பட இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களை நியமித்து அரசுப் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சீயோன்குமார் (37) சொந்த வேலை காரணமாக விருத்தாசலத்துக்கு வந்தார். இன்னும் சிலர் சென்னையில் இருந்து வந்ததால், அவர்களை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்குச் சென்றார். அங்கு காத்திருந்த சாமுவேல், அவரது மகள் சாரன்தீதி (7) ஆகியோரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு தற்காலிக ஓட்டுநர்கள் இரண்டு அரசுப் பேருந்துகளை ஓட்டிக் கொண்டுவந்தனர்.
இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே சீயோன்குமார் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற பேருந்து திடீரென நின்றது. இதனையடுத்து, சீயோன்குமாரும் தனது மோட்டார் சைக்கிளை உடனடியாக நிறுத்தினார். ஆனால், அவருக்கு பின்னால் வந்த மற்றொரு அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், சீயோன்குமார் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சிறுமி சாரன்தீதி, சாமுவேல் ஆகியோர் பலத்த காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சீயோன்குமாரின் சடலம் உடல்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக, விருத்தாசலம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து, தற்காலிக ஓட்டுநரான விருத்தாசலத்தை அடுத்த எருமனூரைச் சேர்ந்த ஜோதி மகன் ஏழுமலையைக் கைது செய்தனர்.