youth killed in bike accident
சென்னை நகரில் இரவு நேரங்களில் பணத்தை வைத்து பைக் ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனை போலீசார் தீவிரமாக தடுத்து வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சென்னையின் முக்கிய சாலைகளில் நேற்று இரவு முழுவதும் பைக் ரேஸ் நடைபற்றது. இன்று 27வது நோன்பு நாள் என்பாதல், நேற்று இரவு முழுவதும் தொழுகை நடந்தது. இதையொட்டி இரவில் தூங்காமல் இருப்பதற்காக அவரவர் விருப்பப்படி பல்வேறு விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில், ராயபுரம் பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் பாஷா. இவரது மகன் நிஜாமுதீன் (17). இவரது நண்பர்கள் இர்பான் (17), அக்பர் (17). இவர்கள் 3 பேரும், நோன்பின் 27வது நாளான நேற்று இரவு பைக் ரேசில் கலந்து கொள்வதற்காக பைக்கில் புறப்பட்டனர்.
ராயபுரம் மேம்பாலத்தில் வேகமாக பைக்கில் சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பஸ் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நிஜாமுதீன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இர்பான், அக்பர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை பிரேத பரிசோதனைக்கும், படுகாயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காகவும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள், தங்களுக்கான பிரத்யேக மெக்கானிக்குகளை தயார் செய்து வைத்துள்ளனர். அவர்களை கொண்டு இன்ஜின், போர் மற்றும் சைலன்சற்கு மாற்றாக சேம்பர் எனும் பகுதியை இணைத்து இன்ஜின் ஆயில் கிளச் பிளேட் உள்ளிட்டவைகள் இணைத்து பைக் ரைட்டிங் செய்கின்றனர். இதற்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது.
சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்து, இரவு நேரங்களில் இதுபோன்ற பைக் ரேஸ் செல்பவர்களை தடுத்தாலும், அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
இதனை காவல்துறையினர் கண்காணிப்பதோடு மட்டுமின்றி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய பைக் ரேசிங் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
