எந்த நொடியும் உங்கள் குழந்தை கடத்தப்படலாம்: ஆதாரங்களுடன் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
ஜஸ்ட் ஒரே நொடிதான்! உலுக்கி எடுத்துவிடும் அப்படியொரு கற்பனை. உங்கள் வீட்டுக் குழந்தை காணாமல் போய்விட்டதாக ஒரு நொடி சிந்தித்துப் பாருங்களேன், உடல் நடுங்கி தலை சுற்றிவிடாதா? ஆனால் நம் தேசத்தில் ஒவ்வொரு எட்டு நொடிக்கும் ஒரு குழந்தை காணாமல் போவதாக தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் ரிப்போர்ட் சொல்கிறது.
கடந்த 2015ல் துவங்கி மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் எட்டு லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக அப்புள்ளிவிபரம் சொல்கிறது.
சரி தமிழகம் மற்றும் தேசிய அளவில் கடத்தப்படும் குழந்தைகள் என்னதான் செய்யப்படுகின்றன?...தகவல்களை எடுத்து வைக்கிறது ‘Save The Children’ அமைப்பு...
* சர்வதேச அளவில் குழந்தை கடத்தல் ப்ராஜெக்டுக்கு மூலஸ்தலமாக இந்தியா இருக்கிறது. காரணம் நம் நாட்டின் ஏழ்மை நிலை.
* ’நல்ல உணவு, தரமான படிப்பு, பெரிய இடத்தில் வேலை’ எனும் உறுதிமொழிகளுடன் பெற்றவர்களின் மூளையை சலவை செய்து குழந்தையை வெகு எளிதாக அழைத்து சென்றுவிடுகிறார்கள். சொல்லப்போனால் இது ஒரு லீகல் கடத்தல்.
* அதேபோல் ‘தத்தெடுக்கிறோம்’ எனும் தலைப்புடனும் குழந்தை கடத்தல் நடக்கிறது.
* தத்தெடுக்கப்படும் குழந்தைகளில் கணிசமானவை ஐரோப்பியா, தென்கிழக்கு நாடுகளில் விற்கப்படுகின்றன.
* தேசத்தினுள்ளேயே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கடத்தப்படும் குழந்தைகள் கூலி வேலை, பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துதல் என்று சித்ரவதைக்கு ஆளாகின்றன.
* நம் தேசத்தில் ‘குழந்தைகள் காப்பகம்’ எனும் பெயரில் வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கும் அமைப்புகள், எண்ணிக்கையை காட்டுவதற்காக அக்கம்பக்க மாநிலத்திலிருந்து குழந்தை கடத்தலை அல்லது பெற்றோரை ஏமாற்றி குழந்தையை அழைத்து வருதலை ஊக்குவிக்கின்றன.
* வெளிநாட்டுக்கு கடத்தப்படும் குழந்தைகளின் உடல் உறுப்புகள் பறிபோகும் அபாயமும், வெளிநாட்டு மருத்துவமனைகளில் புதிய வகை மருந்து பரிசோதனைக்கான உயிரியாகவும் மாற்றப்படும் அபாயம் இருக்கிறது.
* ஏழை குழந்தைகள் மட்டுமே கடத்தப்படும் என்று எந்த விதியையும் குழந்தை கடத்தல் மாஃபியாக்கள் வகுத்திருக்கவில்லை. நடுத்தர, உயர் நடுத்தர, உயர் தர என எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படும் அபாயம் உள்ளது. ‘மிட்டாய் தருகிறேன்’ என்பதில் துவங்கி ‘அப்பா அழைக்கிறார்’ என்பது வரை எந்த வகையிலும் இவர்கள் குழந்தைகளை கொத்திச் செல்லலாம்.
* கடந்த பத்து ஆண்டுகளில் நம் தேசத்தில் சுமார் பதினான்கு மடங்கு குழந்தை கடத்தல் குற்றஙக்ள் அதிகரித்திருப்பதாக தெரிய வருகிறது.
* கடத்தல் கழுகுகளின் கண்களில் உங்கள் வீட்டுக் குழந்தைகளும் பட்டுவிடக்கூடும். இது அச்சுறுத்தல் அல்ல. எச்சரிக்கை உணர்வுதானே எப்போதும் அபாயங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும்?!
குழந்தைகள் பத்திரம்!