Asianet News TamilAsianet News Tamil

இளைஞர்கள் தமிழ் பண்பாட்டை கற்றுக் கொண்டு படையை உருவாக்க வேண்டும் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்

Young people should learn Tamil culture and create force - Chairman of Malaysian Tamil Writers Association
Young people should learn Tamil culture and create force - Chairman of Malaysian Tamil Writers Association
Author
First Published Aug 26, 2017, 9:38 AM IST


தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மலேசிய மாணவர்களுக்கு நடந்த பயிலரங்கத்தில் “இளைஞர்கள், பண்பாட்டை கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு ஆசான்களாக இருந்து ஒரு படையை உருவாக்க வேண்டும்” மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மலேசிய மாணவர்களுக்கான தமிழ்ப் பண்பாட்டு பயிலரங்கம் தொடக்கவிழா நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதனை பரசுராமன் எம்.பி. தொடங்கி வைத்தார். துறை தலைவர் குறிஞ்சிவேந்தன் வரவேற்றார். இதில் பதிவாளர் முத்துக்குமார், கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் பேசினர்.

அப்போது துணைவேந்தர் பாஸ்கரன் பேசியது: “வேர்களை தேடி விழுதுகளாய் மலேசிய மாணவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். மொழி தான் இனத்தின் அடையாளம். எந்த ஒரு இனத்தின் மொழி அழிகிறதோ, அப்போது அந்த இனம் அழிந்துவிடும்.

தமிழ்ப் பண்பாடு என்பது தமிழர்களை கட்டி காக்கின்ற பெரிய அரண் என்று சொல்லலாம். பண்பாடு என்று சொன்னால் பல நிலைகளில் நாம் அதனுடைய முழுமையான அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் நாம் சொல்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம்.

பண்பாடு என்பது நம்மோடு பயணிக்கக் கூடிய ஒன்று. பிறந்தது முதல் இறப்பு வரை பண்பாடு என்பதை நாம் அறியாமலேயே, அதனுடைய வீழ்ச்சி தெரியாமலேயே அதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பண்பாடு என்பது நம் இரத்தத்தோடு ஊறியது என்று சொல்கிறோம். அந்த இரத்தம், தமிழ் இரத்தமாக இருந்தால் தமிழ்ப் பண்பாடாக இருக்கிறது. நம் உயிரோடு, உணர்வோடு கலந்த தமிழ்ப் பண்பாட்டை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வாழ்வது மலேசியாவாக இருந்தாலும் வாழப்போவது தமிழ்ப் பண்பாட்டுடன் தான்” என்று அவர் பேசினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், “மலேசிய நாட்டில் ஆரம்பப் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் தமிழில் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரசு பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மலேசியாவில் அரசே தமிழ்க் கல்விக்கு பாடப் புத்தகம் முதல் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது. மலேசியாவில் மாணவர்கள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டாலும் கூட அவர்களுக்கு அரசு சார்பற்ற நிறுவனங்களின் வழியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழர்களுடைய பண்பாட்டிற்கு துணை புரிகிறது.

தமிழ் மொழியில் இருந்தும், தமிழ்ப் பண்பாட்டில் இருந்தும் இந்த தலைமுறையினர் அன்னியப்பட்டு போவது போல தோற்றம் எங்களுக்கு ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள், பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இவர்களே ஆசான்களாக இருந்து ஒரு படையை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த விழாவில் மலேசியாவில் இருந்து வந்திருந்த 25 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதியில் பேராசிரியர் பிரபாகரன் நன்றித் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios