பெண் டீச்சரின் அட்ரெஸ் கேட்டு முதியவரை கத்திமுனையில் மிரட்டிய வாலிபர்... பூந்தமல்லியில் நடந்த பரபரப்பு சம்பவம்
சென்னை பூந்தமல்லி பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரை இளைஞர் ஒருவர் திடீரென வளைத்துப் பிடித்து அவரது கையில் சட்..சட் என இரண்டு,மூன்று முறை கத்தியால் கீறி விட்டார்…கதறத் தொடங்கிய அந்த முதியவரிடம் சத்யாவின் அட்ரெஸ் கொடு இல்லையென்றால் கழுத்தை அறுத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தான்.
இத்தனையும் பட்டப்பகலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நடந்தது. உடனடியாக அங்கு திரண்ட பொது மக்கள் அந்த முதியவரை அவனிடத்திலிருந்து மீட்க முயன்றனர்.
ஆனால் முதியவரின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டிருந்ததால் அனைவருமே சற்று விலகி நின்றனர்.
தொடர்ந்து அந்த இளைஞன், முதியவரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், சத்யா அட்ரெஸ், சத்யா அட்ரெஸ் கொடு என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
மிரட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞரிடம் இருந்து முதியவரை மீட்க ஒருவர் கல்லைகொண்டு எறிந்துள்ளார் அந்த இளைஞர் விலகிக்கொள்ள முதியவர் தலையில் பட்டு ரத்தம் வழிந்துள்ளது.
அதன் பிறகும் அவரை விடாமல் பிடித்து வைத்து மிரட்டிக்கொண்டிருந்த இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து அந்த முதியவரை மீட்டுள்ளனர். 30 நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பார்த்திபன் என்பதும், அந்த முதியவர், பார்த்திபனின் 8 ஆம் வகுப்பு ஆசிரியை சத்யா வின் தந்தை என்பதும் தெரியவந்தது.
பார்த்திபன் சத்யா டீச்சரிடம் டியூசன் படித்தவர் என்றும், அவரது குடும்பத்துக்கு பார்த்திபன் நன்கு தெந்தவர் என்றும் விசாரணையில் தெரிவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பார்த்திபன் மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் மனநல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும், தனது தலையில் இருக்கும் ஸ்குரூவை அகற்ற, சர்க்கிள் இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும், என்பதால் அவருடைய போன் நம்பர் சத்யா டீச்சருக்கு தான் தெரியும் என்றும் சாலையில் சத்யா டீச்சரின் தந்தை நடந்து சென்று கொண்டிருந்தததை பார்த்ததும் அவரது அட்ரெஸ் கேட்டுத்தான் முதியவரை பார்த்திபன் சிறை பிடித்து மிரட்டியதும் தெரிய வந்ததது.
சத்யா டீச்சரின் தந்தை புகார் அளித்ததை தொடர்ந்து கொலைமுயற்சி வழக்கில் பார்த்திபனை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.