பானிபூரி கடன் தராததால் கடுப்பான இளைஞர்; கடைகாரரின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் கைது...
ஈரோடு
ஈரோட்டில், கடனுக்கு பானிபூரி தராததால் கடுப்பானவர், கடைகாரரின் தந்தைக்கு வீட்டிக்கு சென்றே கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே உள்ள மலையம்பாளையம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் லோகநாதன். இவர் கருமாண்டாம்பாளையத்தில் பேக்கரி (அடுமணை) மற்றும் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
லோகநாதனின் கடைக்கு மலையம்பாளையம் நத்தமேடுவில் வசிக்கும் முருகேசனின் மகன் வினோத்குமார் (25) என்பவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
அப்போது வினோத்குமார், லோகநாதனிடம் கடனுக்கு பானிபூரி கேட்டுள்ளார். அதற்கு லோகநாதன், "கடனுக்கு தரமுடியாது" என்று கூறி பானிபூரி தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், லோகநாதனின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்றுள்ளார். அங்கிருந்த அவரது தந்தை செந்தில்குமாரிடம், "உனது மகன் எனக்கு கடனுக்கு பானிபூரி கொடுக்க மறுத்துவிட்டான். அவன் எப்படி கடை வைத்து நடத்துகிறான்? என்று நானும் பார்த்துவிடுகிறேன்" என்று கூறி தகராறு செய்துள்ளார். மேலும், தகாத வார்த்தையால் பேசி செந்தில்குமாருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து செந்தில்குமார் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து வினோத்குமாரை உடனே கைது செய்தனர்.