தர்மபுரி
பாலக்கோடு பகுதி மக்களுக்கு, தங்கள் பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை சுடுகாடாக ஒதுக்கித் தர வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
பாலக்கோடு பகுதியில் உள்ள ஜே.ஜே.நகரில் சுடுகாட்டுக்காக புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், நேற்று தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் வந்து, டி.ஆர்.ஓ. சங்கரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
“பாலக்கோடு அடுத்த பெலமாரனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜே.ஜே.நகரில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு சுடுகாடு இல்லாததால், இறந்தவர்களை, அருகில் உள்ள சின்னாற்றுப் பகுதியில் புதைத்து வருகிறோம்.
மழைகாலங்களில், இந்த ஆற்றில் தண்ணீர் வரும்போது, இங்கு புதைக்கப்பட்ட சடலங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது.
எனவே, பெலமாரனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜே.ஜே.,நகர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை, சுடுகாட்டுக்காக ஒதுக்கித் தர வேண்டும். இதுகுறித்து பலமுறை தாலுகா அலுவலகத்திலும், தர்மபுரி ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம்.
இதையடுத்து, அதிகாரிகள் இந்த நிலத்தை ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, இங்குள்ள புறம்போக்கு நிலத்தை, எங்களுக்கு சுடுகாட்டு நிலமாக ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.
