மருந்துகடையில் தலைவலி மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் இறப்பு - போலீஸ் விசாரணை...
கடலூர்
கடலூரில் திடிரென ஏற்பட்ட தலை வலிக்காக மருந்துகடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சத்யா நகரைச் சேர்ந்தவர் பாபுராஜ் மனைவி சத்யா (24). இவருக்கு தலை வலி ஏற்பட்டதையடுத்து மருந்து கடையொன்றில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர், வீட்டில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து சத்யாவின் தாய் பச்சையம்மாள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சத்யா தலை வலியால் ஏற்பட்ட பாதிப்பால் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது மருந்து கடையில் ஏதேனும் தவறாக கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்டதால் இறந்தாரா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.