Will you have to give basic facilities to sleep everything panchayat office Please
கயத்தாறு
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும்வரை கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் தான் சாப்பிடுவதும், தூங்குவதும் என்று முடிவுசெய்து பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகர பஞ்சாயத்து 3–வது வார்டு பகுதியான அரசன்குளம் நாற்கர சாலையில் உள்ளது. இந்த பகுதி வழியாக கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி குடிநீர் திட்டக் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், கயத்தாறு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அரசன்குளத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கயத்தாறு நகருக்குள் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுவதால், கடந்த சில மாதங்களாக அரசன்குளத்திற்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
அத்துடன், அரசன்குளத்தில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால், பலரும் திறந்தவெளியில் மல, ஜலம் கழிக்கும் பரிதாப நிலை இருக்கிறது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூட கழிப்பறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும், அங்கன்வாடியில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளும் கிடப்பில் கிடக்கின்றன.
இதனால், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தினருடன் அனைவரும் பஞ்சாயத்து அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்தனர்.
நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டனர். பின்னர் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கினர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையிலும், போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
