விவசாய நிலங்களை பாழாக்கும் காட்டுப் பன்றிகள்; வண்ண வண்ண சேலைகளை கட்டி தடுக்கும் விவசாயிகள்…
தருமபுரி
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைத் தடுக்க விளை நிலங்களை சுற்றி வண்ண வண்ண சேலைகளை கட்டி நிலங்களை காத்து வருகின்றனர் விவசாயிகள்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில்தான், தமிழகத்திலேயே அதிக வனப்பகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவிகிதம் வனப்பகுதியாகும்.
இந்த வனப்பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள் அதிகளவில் நடமாடுகின்ற நிலையில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் விளை நிலங்களில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
அவற்றில், நெல், சோளம், கேழ்வரகு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களும் அடங்கும். இந்தப் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடையாகும் நிலையில் வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி விளை நிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் அப்பயிர்களை சேதப்படுத்துங்கின்றன.
எப்போதாவது ஒருமுறை என்றாலும் பராவயில்லை. அடிக்கடி இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் விளை நிலங்கள் சேதம் விவசாயிகாளுக்கு பெரும் நட்டம் ஏற்படுகிறது.
மேலும், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவது விவசாயிகளை கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்களை சுற்றி பல வண்ணங்காளில் சேலைகளை வரிசையாக கட்டி வைத்து பாதுகாக்கும் முறை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது:
“விளை நிலங்களில் பல வண்ணங்களில் சேலைகளை கட்டுவதால் அவை காற்றில் லேசாக அசையும்போது விளை நிலங்களில் நுழைய வரும் காட்டுப்பன்றிகள் அதனை ஆட்கள் நடமாடுவதாக நினைத்து அச்சமடைகின்றன. இதனால் விளை நிலத்திற்குள் நுழையாமல் திரும்பி செல்ல வாய்ப்பு உள்ளது.
பயிர்சேதத்தை தவிர்க்க இந்த முறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிற போதிலும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர்சேதத்திற்கு இது நிரந்தர தீர்வு ஆகாது.
காட்டுப்பன்றிகள் வனப்பகுதிகளில் இருந்து விளைநிலங்களுக்கு உணவு தேடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவற்றைத் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.