மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோரின் வீட்டுக்கு சென்றுவிட்டதால் கணவன் தூக்குப்போட்டு சாவு...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுவிட்டதால் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாதாளமுத்து (35). கட்டிட தொழிலாளியான் இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
பாதாளமுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிலரிடம் கடன் வாங்கி, வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு சரியாக சம்பளம் கிடைக்காததால், அவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
பின்னர், அவர் தன்னுடைய அண்ணன் சக்திவேலுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, நாசரேத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு குழந்தையுடன் கீதா சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாதாளமுத்து நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர் வேலைக்கு வராததால், சக்திவேல் தன்னுடைய தம்பியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது பாதாளமுத்து தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாதாளமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.