மனைவி தற்கொலை; காரணமான கணவன், மாமியார் மற்றும் கணவனின் தம்பி கைது…
காவேரிப்பாக்கத்தில் தகாத வார்த்தைகள் பேசி கணவன், மாமியார் மற்றும் கணவனின் தம்பி ஆகியோரால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவரின் மகன்கள் கோபி (எ) வெங்கடேசன் (48), சுரேஷ் (37). இவர்கள் இருவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இவர்களுக்குத் திருமணமாகி, அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களிடையே இருக்கும் சொத்துப் பிரச்சனையால், அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வெங்கடேசனின் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் பீரோவில் இருந்த 150 ரூபாயைத் திருடியதாகவும், அதனை வெங்கடேசனின் மனைவி நித்யா (35) தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கோவமடைந்த சுரேஷ் நித்யாவை தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
சுரேஷுக்கு ஆதரவாக அவரது தாய் விஜயா, அண்ணன் வெங்கடேசன் ஆகியோரும் நித்யாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.
இதில் மனமுடைந்த நித்யா அன்றிரவு வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், வெங்கடேசன், அவரது தம்பி சுரேஷ், தாய் விஜயா ஆகிய மூன்று பேரையும் நித்யாவை தற்கொலைக்குத் தூண்டியதாக காவலாளர்கள் கைது செய்தனர்.