தூத்துக்குடிக்கு ஆறுதல் சொல்ல விஜய் நள்ளிரவில் சென்றதன் காரணம் என்ன?
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மக்கள் போராடிய போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு, 13 அப்பாவி மக்கள் பலியாகினர். ஜனநாயக படுகொலையாக கருதப்படும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தூத்துக்குடிக்கு சென்று, மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் வீட்டுக்கு நடிகர் விஜய் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்றுள்ளார்.
ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 15 நிமிடங்கள் இருந்து அந்த குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்த விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டதோடு, தாமதமாக வந்ததாக என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கு உள்ள சூழல், உங்களுக்கே தெரியும். உங்களுக்கும் பல நெருக்கடிகள் இருக்கிறது இதை கணக்கில் கொண்டுதான் வரதாமதமானது என்று சொன்ன தளபதி விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரசிகர் மன்ற நிர்வாகியோடு இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்து சென்றார் விஜய். பகலில் கூட்டம் கூடும் என்பதால், நள்ளிரவில் சென்று பதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஏற்கனவே பகல் நேரத்தில் ரஜினிகாந்த் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர்.
பின்னர் அது பெரும் விவாதமாக மாறியது. பிரபலங்கள் வருவதை சிலர் அரசியல் பிரவேசத்திற்காக என்று விமர்சனங்களும் செய்கின்றனர் என்பதால், இதுவரை எந்த கருத்தும், கண்டனமும் கூட தெரிவிக்கவில்லை, சத்தமில்லாமல் ஆறுதல் கூறி, நிதி உதவி அளிக்க எண்ணினார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.