நாகர்கோவில்,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை உறுதியானதை நாகர்கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவினர், திமுகவினர் மற்றும் ஜெ.தீபா பேரவையினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிபதி குன்காவின் தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மேலும், ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதால் குமரி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா முன் மாவட்ட பால்வள தலைவரும், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளருமான அசோகன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது

இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சந்தோஷ், சாம்ராஜ், பூங்கா கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கார்மல்நகர் தனிஷ் தலைமையில் செட்டிகுளம், புன்னைநகர், ராமன்புதூர் ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை கொண்டாடினர்.

இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினார்கள்.

சசிகலாவுக்கு சிறை உறுதியானதை தி.மு.க.வும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியது.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல் ஜெ. தீபா பேரவை சார்பிலும் வெட்டூர்ணிமடத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது. மேலும், தீபாவுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.