Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கை.. பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட அறிவிப்பு..

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று மாநில அவசரகால செயலாக்க மையத்தில் ஆய்வு செய்தார்.

Weather announcement issued by Disaster Management Department
Author
First Published Nov 7, 2022, 4:55 PM IST

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக  23 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 45 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன என்று பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று மாநில அவசரகால செயலாக்க மையத்தில் ஆய்வு செய்தார்.

மழை காரணமாக நேற்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக  23 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 45 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 71 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 833 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

மேலும் படிக்க:தமிழகத்தில் நவ.10 ஆம் தேதி முதல் கனமழை.. எங்கெல்லாம் மழை பெய்யும்..? வெதர் அப்டேட்..

வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

7-11-2022 மற்றும் 8-11-2022 ஆகிய நாட்களில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-11-2022 அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 4.11.2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-11-2022 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமசந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்: 

இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.61 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 19 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 713 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.73 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 165 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 292 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:உருவாகிறது புதிய புயல்..? எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios