we are not seperate like admk even we have conflict in Congress -kushboo
கரூர்
காங்கிரசில் கோஷ்டி பூசல் இருந்தாலும் அதிமுகவைபோல யாரும் பல அணிகளாக பிரிந்து செல்லவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில் பொதுக் கூட்டம் கரூர் கலங்கரை விளக்கம் தோட்டத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரசு கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பங்கேற்று பேசினார்.
கூட்டத்திற்கு பிறகு காங்கிரசு கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "சட்டசபையில் ஜெயலலிதா புகைப்படம் திறந்தது சட்டப்படி தவறானது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார்.
ஜெயலலிதா படத் திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும்.
தமிழகத்தில் காமராசர் ஆட்சி மலர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே காமராசர் ஆட்சி விரைவில் மலரும். அதற்கான நேரம் காலம் வரும்.
காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மைதான். பல கோஷ்டிகளாக இருந்தாலும் ஒரே கட்சியில்தான் இருக்கிறோம். கோஷ்டி பூசலால் கட்சி வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுகவை போல பல அணிகளாக யாரும் பிரிந்து செல்லவில்லை.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கி அரசியலில் முதலில் ஈடுபடட்டும். அதன்பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன். அவர்களது அரசியலை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, மாவட்டத் தலைவர் சின்னசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
