விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரில் இருவரை குற்றம் நடந்த குடோனுக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இளம்பெண் பாலியல் வன்கொடுமை:
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரில் இருவரை குற்றம் நடந்த குடோனுக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த 8 பேரை அண்மையில் விருதுநகர் காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

சிபிசிஐடி விசாரணை:
திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது" என்றார்.

வேகமெடுக்கும் விசாரணை:
மேலும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்குள் எடுத்து செல்லப்படும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையும் பெற்று தரப்படும். விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும். தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.இவ்வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டதை அடுத்து, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி போலீஸார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தினர். கைதுசெய்யப்பட்ட 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனை நடத்தினர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து, அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமது ஆகியோரை சம்பவம் நடந்த மருந்து குடோனுக்கு நேரில் அழைத்து வந்து டிஎஸ்பி வினோதினி தலைமையில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
