Asianet News TamilAsianet News Tamil

காவிரி கூட்டுக் குடிநீரை முறையாக வழங்க கோரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்...

villagers surrounded union office demanding proper supply of Cauvery drinking water
villagers surrounded union office demanding proper supply of Cauvery drinking water
Author
First Published Apr 25, 2018, 9:37 AM IST


இராமநாதபுரம்
 
காவிரி கூட்டுக் குடிநீரை முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் வலசை கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவலாளர்களிடம், அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், "நயினார்கோவில் யூனியன் வாணியவல்லம் ஊராட்சியில் வாணியவல்லம், வலசை, மேலியேனந்தல், மற்றும் யாதவர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியின் நிதியின் மூலம் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி மிகவும் சிறியதாக உள்ளது. 

இதில் காவிரி கூட்டுக்குடிநீர் நிரப்பப்பட்டு, இந்த பகுதியில் உள்ள 4 ஊர்களுக்கு வாரம் இருமுறை தான் தண்ணீர் கிடைக்கிறது. 

இந்த நிலையில் இந்த தண்ணீர் தொட்டியின் நீரை கரைமேல் குடியிருப்பு கிராமத்திற்கு யூனியன் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து எங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

இந்த தண்ணீர் தொட்டியை மாற்றியமைப்பது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது. ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின்பேரில் இரவோடு இரவாக மாற்றி அமைத்துள்ளனர். இதனை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். 

மேலும், எங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீரை முறையாக வழங்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.  மக்களும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios