குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு...
திருப்பூர்
பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையத்தைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனை முற்றுகையிட்டனர்.
பின்னர் அந்த பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனிடம், "எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 20 நாள்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீரின்றி நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் குடிநீருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றக்கோரி இங்கு வந்துள்ளோம்" என்று முறையிட்டனர்.
அதனைக் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், "இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் முறையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.