"தமிழகத்துக்கு நிவாரணம் கொடுத்துட்டு நாங்க எங்க போறது?" - கைவிரித்த வெங்கையா
தமிழக அரசு கேட்டுள்ள வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசால் கொடுக்க முடியாது என்றும், அவ்வளவு தொகையை கொடுத்துவிட்டு நாங்கள் செலவுக்கு எங்கே போவது என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பினார்.
சென்னையில் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, நாட்டில் வறுமையைப் போக்க பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதையே மத்திய அரசு விரும்புகிறது என்றும், மற்றபடி அதிமுக உட்கட்சி விவசாரங்களில் ஒருபோதும் பாஜக தலையிடாது என நாயுடு தெரிவித்தார்.
அதே நேரத்தில் தமிழக மக்களின் நன்மை கருதி ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்த செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு ஏன் வறட்சி நிவாரண நிதிளை மத்திய அரசு தராமல் உள்ளது என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வெங்கய்யா நாயுடு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கொடுக்க முடியாது என்றும், அவ்வளவு தொகையை மாநில அரசுக்கு கொடுத்துவிட்டு, மத்திய அரசு செலவுக்கு என்ன செய்யும் என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அதை நீங்கள் குடியரசுத் தலைவரிடம் போய் கேளுங்கள் என்று வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.