வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை சுருக்கினால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் எனவும் எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய விண்ணப்பத்தை நிரந்தரமாக திரும்பப் பெற்றுக்கொள்ளவதாகவும் தமிழக வனத்துறை கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் 5 ஆயிரத்து 467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. சரணாலயத்தின் 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை பாதுக்காக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும், நிலப்பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சரணாலயத்தின் எல்லையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும், ஏரியைச் சுற்றியுள்ள முதல் 1 கிலோமீட்டர் சுற்றளவை core zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை buffer zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை eco sensitive zone ஆகவும் வகைப்பாடு செய்யப்போவதால் மொத்தமுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியையும் பாதுகாக்க முடியும் என தமிழக வனத்துறை தெரிவித்தது.மேலும் சரணாலய பகுதியை தனியார் நிறுவனத்திற்கோ, தொழிற்சாலை அமைக்கவோ,வர்த்தக நிறுவனம் அமைக்க அரசு உதவுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் வனத்துறை சார்பில் விளக்கமளிக்கபப்ட்டது.

வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தில் மொத்த பரப்பளவில் 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை குறைக்கும் எண்ணமில்லை என்று கூறியிருந்தாலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு மத்திய அரசிடம் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான அனுமதிகோரி சமர்ப்பித்த விண்ணப்பமானது திருமப் பெறப்படாமலே இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடந்த புதன்கிழமை வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை சுருக்கினால் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதால் ஏற்கெனவே எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய விண்ணப்பத்தை நிரந்தரமாக திரும்பப் பெற்றுக்கொண்டதாக கருதுமாறு கூறப்பட்டுள்ளது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
