வண்டலூர் பூங்கா மூடல்..70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று..அதிரடி நடவடிக்கை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குனர் கர்ண பிரியா தெரிவித்துள்ளார். கொரானா தொற்று கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மூலம் விலங்குகளுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்கா தற்போது தொற்று பரவல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த புதன் கிழமை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளிவந்த முடிவுகளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தனிமை படுத்தி வருகின்றனர். மொத்தம் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த நிலையில் 70 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனால் உயிரியல் பூங்கா நாளை முதல் முடப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்படும் பின்னர் தொற்று பரவல் சூழ்நிலை பொறுத்தே பூங்கா திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒமைக்ரான் தொற்றும் பரவல் வேகமும் அதிகமாக உள்ளது. இதனால் தமிழக அரசு கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு , சுற்றுலா தளங்களில் கட்டுபாட்டு உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று ஒரே நாளில் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,459 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 530 அதிகரித்து 23,989 ஆக பதிவாகியுள்ளது. 1,43,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,989 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,989 ஆக அதிகரித்துள்ளது.