"ஜல்லிகட்டுக்கு போராடியதை போல நீட் தேர்வுக்கு எதிராக போராடுங்கள்" - மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள்!!
நீட் தேர்வு விவகாரத்தில், ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள், மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர். தமிழக மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை கொண்டு வந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசாணையை ரத்து செய்தது தடை செய்ய முடியாது என்றும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்கு போராடியதுபோல நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட வேண்டும் என்று கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜக குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவளித்திருக்க மாட்டார் என்றும் வைகோ கூறினார்.