பேச்சுவார்த்தையில் உடன்பாடு - காவல் ஆய்வாளரால் உயிரிழந்த உஷா உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு...!
காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து காவல் ஆய்வாளரால் உயிரிழந்த இளம்பெண் உஷாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.
அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.
இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க மாட்டோம் என உஷாவின் உறவினர்கள் கூறிவந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து காவல் ஆய்வாளரால் உயிரிழந்த இளம்பெண் உஷாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.