இரு சக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு...
கும்பகோணத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாஸ் என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் கல்லூரி பேருந்தில் தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
அதன்படி இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து, மாணவ – மாணவிகளை ஏற்றி க் கொண்டு கும்பகோணம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவிந்தபுரத்தில் வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து பலமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு கும்பகோணம் தலைமை அரசு மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.