குளித்தலை அருகே கார் மீது மணல் லாரி அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் அண்ணன் - 2 தங்கைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரளாவின் எர்ணாகுளம் தங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாக்கர் (50). இவர், கேரளா காக்காநாடு பகுதியைச் சேர்ந்த தனது தங்கை ஆசியா (37) மற்றொரு தங்கையான நஷிமா (44) மற்றும் நஷிமாவின் மகன் முகமதுசபீ (24), மகள் தனுஷா (17) ஆகியோரை அழைத்துக் கொண்டு நாகூர் தர்காவிற்கு காரில் புறப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முகமது சபீக்கு கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. நாகூர் தர்காவில் வழிபாடு செய்வதற்காக குடும்பத்துடன் வந்துள்ளனர். காரை பாக்கர் ஓட்டினார்.

கார் திங்கள் கிழமை திருச்சி - கரூர் புதிய புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை பகுதி வழியாக திருச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு குளித்தலை வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது லாரி ஒன்று. குளித்தலை கடம்பர் கோவில், பெரியபாலம் இடைபட்ட பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது திடீரென மணல் லாரி அதிவேகமாக மோதியது.

இதில் காரை ஓட்டிவந்த பாக்கர் தலை நசுங்கிய நிலையில் காரில் அமர்ந்த படியே உயிரிழந்தார். இவருக்கு பின்னால் காரில் உட்கார்ந்து இருந்த இவரது தங்கை நஷிமா தலையில் பலத்த காயத்துடன் காரின் பக்கவாட்டில் இரத்தம் வழிய உடல் தொங்கிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

மேலும் காரில் அமர்ந்திருந்த இவரின் மற்றொரு தங்கை ஆசியா, தனுஷா, முகமதுசபீ ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து நசுங்கிய காருக்குள் சிக்கிக் கொண்டு அலறினர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரந்து வந்த குளித்தலை காவலாளர்கள், முசிறி தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்த ஆசியா, தனுஷா, முகமதுசபீ ஆகிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

பின்னர் காரில் இறந்த நிலையில் கிடந்த பாக்கர், நஷிமா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் விபத்துக்குள்ளான லாரி மற்றும் கார் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த விபத்து காரணமாக திருச்சி - கரூர் புதிய புறவழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதில் ஆசியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகமதுசபீ, தனுஷா ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இதுகுறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி ஓட்டுநரான சேலம் அத்திராம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியை கைது செய்தனர்.