ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது என தமிழக அரசு கூறியிருந்ததை பொய் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்த டிஆர்பி ராஜா, ஃபாக்ஸ்கான் முதலீடு 100% உண்மை என்று கூறியுள்ளார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ.15,000 கோடிக்கு முதலீடு செய்ய இதன்மூலம் 14,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் முதலீடுகள் குறித்து ஃபாக்ஸ்கான் பேசவில்லை என்றும் தமிழக அரசு பொய் சொல்வதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக அரசின் பொய் அரை நாளில் அம்பலம்

'தமிழக முதலமைச்சர் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகியிருக்கிறது' என்று அன்புமணி கூறியிருந்தார்.

அன்புமணிக்கு டிஆர்பி ராஜா கண்டனம்

இந்நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வது 100% உண்மை என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டிஆர்பி ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எப்போதெல்லாம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு நல்லது நடக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்தினால் அந்த வேலைவாய்ப்பில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார்.

ஃபாக்ஸ்கான் முதலீடு 100% உண்மை

இன்றைய உலக அரசியல் சூழலில் ஒரு முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவது எவ்வளவு கடினம் ! அதிலுள்ள Geopolitical issues என்னென்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிடுவதை இனி அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும்.நேற்று பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி.

இது பழைய திட்டம் அல்ல‌

இது ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள். பல மாதங்களாக ஒரு சில ஊடகங்கள் அரசு எந்தவித MoU செய்தியையும் உறுதிசெய்யாத சூழலில் அவர்களாக யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதை துறையோ அல்லது நானோ உற்திசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

புரிந்து கொண்டே நடிக்கிறார்கள்

நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக எதை சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்துகொள்ள முடியாமல், அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது'' என்றார்.