Asianet News TamilAsianet News Tamil

இனி இப்படி நடந்தால்..நடவடிக்கை பாயும்.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்  பேருந்து படிக்கட்டில், ஆபத்தான முறையில் இனி பயணம் மேற்கொண்டால் நடத்துனர், ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
 

Transport Department Announcement
Author
Tamilnadu, First Published Dec 8, 2021, 2:44 PM IST

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்  பேருந்து படிக்கட்டில், ஆபத்தான முறையில் இனி பயணம் மேற்கொண்டால் நடத்துனர், ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லுபவர்கள் காலை , மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதும் , பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில நேரங்களில் இந்த வகையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில், படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பது விபத்துகளை ஏற்படுத்துகின்றன.  

Transport Department Announcement

இந்நிலையில் இதுக்குறித்து, போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியப்படி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், விபத்துகளை தவிர்க்கும் வகையில் பேருந்தில் போதிய இட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, பயணிகள் பேருந்து படிக்கட்டுகளில் நிற்காதவாறு உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் தங்கள் இயக்கும் பேருந்து வழிதடங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகளவு இருக்கின்றனர் என்றால் கூடுதல் பேருந்துகள் இயக்க, ஏதுவாக முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேருந்துகளில் பயணிகள் பாதுக்காப்பாக ஏறி , இறங்குவதை உறுதி செய்தபின், பேருந்துகளை நடத்துனர் அறிவுறுத்த, ஓட்டுனர் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Transport Department Announcement

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயிலில், பேருந்துகளில் தொங்கியடி பயணித்து சாகசம் செய்வதாக நினைத்து ஆபத்தாக பயணிப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் தான், அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த அறிவிப்பு பணியில் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அழுத்தத்தைத் தரும் என்றும் மாறாக கூட்ட நெரிசல் அதிகமுள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Transport Department Announcement

இந்நிலையில் நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடிக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறிய மீன் விற்கும் பெண் செல்வம் என்பவரை ``மீன் வித்திட்டா வர்றே... நாறும் இறங்கு இறங்கு" எனக்கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக ,அந்த மீனவ பெண் பேருந்து நிலையத்தில் கோபத்தில் கண்ணீருடன் பேசிய வீடியோ வைரலானது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பேருந்து நடத்துனர், ஓட்டுனர், பேருந்து நேரக்காப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று வெளிட்ட போக்குவரத்துத்துறையின் இந்த அறிக்கையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபடுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios