விபத்தில் சிக்கியதும் ரூல்ஸ் பேசாமல் முதலுதவி செய்த காவலர்...! குவியும் வாழ்த்து...!
சென்னையில், சாலை விபத்தில் கீழே விழுந்து சுயநினைவிழந்த நபருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார்.
எழும்பூர் ஆதித்தனார் சிலை ரவுண்டனா அருகே இன்று காலை 8:30 மணியளவில், அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று, முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், கீழே விழுந்து சுயநினைவிழந்தார். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சிவக்குமார், அந்த நபரை உடனடியாக மீட்டு அவரின் நெஞ்சுப்பகுதியை கையினால் அழுத்தி சுயநினைவை வரவழைத்தார்.
பின்னர், அந்த நபரை உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, உள்ளிட்ட ஒரு சில சம்பவங்களால் போலீசார் மீது தொடர்ந்து அவப்பெயர்கள் வந்த நிலையில், தற்போது போக்குவரத்து தலைமை காவலர் செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்பட்டால், போலீசார் உன்னுடைய லைசென் காட்டு, இன்சுரன்ஸ் காட்டு என ரூல்ஸ் பேசாமல் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் செய்துள்ள செயல் சல்யூட் போட வைத்துள்ளது.