Tourists coming to Kodaikanal are suffering from water shortage food price doubling
திண்டுக்கல்
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகல், அங்குள்ள தண்ணீர் தட்டுப்பாட்டாலும், உணவு விலை இரண்டு மடங்காக விற்கப்படுவதாலும் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதாலும், கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று மே தினம் விடுமுறை என்பதால் அவர்களின் வருகை வழக்கத்தை விட கூடுதலாயிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டால் விடுதிகளில் அவர்களை தங்க அனுமதிக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.
உணவகங்களில் உணவுப் பொருள்கள் வழக்கத்தை விட 50 சதவீத அளவுக்கு விலை உயர்த்தி விற்கப்படுகின்றன.
கொடைக்கானல் நகராட்சி எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், நகரில் பல இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியது:
“கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வாகனங்கள் நிறுத்தம் உள்ளது. அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பிரச்னைக் குறித்து யாராவது
புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உணவகங்களில் உணவுப் பொருள்கள் விலை விவரம் குறித்து விலைப் பட்டியல் வைக்க எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. உணவகங்களிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்தப்படுவது ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்” என்று கூறினார்.
