வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9 ஆம் தேதியன்று தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 10 ஆம் தேதியன்று வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யகூடும் என்று அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9 ஆம் தேதியன்று தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 10 ஆம் தேதியன்று வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யகூடும் என்று அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வரும் 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9-ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 10 ஆம் தேதியன்று கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யகூடும் . ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் , எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
