இன்று தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு… நடிகர் கமலஹாசன் வாழ்த்து !!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகளை 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுத இருக்கின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் காப்பி அடிக்கக்கூடாது, காலணி, ஷூ, பெல்ட் அணியக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் மாணவ– மாணவிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு இருக்கிறது.
இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும் என பள்ளிக்ல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே இன்று பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.