நாளை மறுநாள் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு!
ரேஷன் கடைகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
![TN Ration shops to be operated on coming firday 12th january for pongal gift distribution smp TN Ration shops to be operated on coming firday 12th january for pongal gift distribution smp](https://static-ai.asianetnews.com/images/01h9csx2eyb2gp9680krmd04sf/asianet-news--92-_363x203xt.jpg)
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுதவிர, அரசின் நலத்திட்ட உதவிகள், பேரிடர் காலங்களில் வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்டவைகளும் ரேஷன் கார்டுகள் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233க்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயங்கும் ரேஷன் கடைகளுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில், ரேஷன் கடைகள் வருகிற 12ஆம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், வருகிற 16.01.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.