TN officers attacked in rajasthan

ராஜஸ்தானில் இறைச்சிக்காக பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை லாரியில் ஏற்றி செல்வதாக கருதி 50 க்கும் மேற்பட்ட பசு பாதுகாவலர்கள் தமிழக கால்நடை பராமரிப்பு அதிகளுக்கு அடி உதை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறபித்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் இயற்ற முடியாது என நேரடியாகவே தெரிவித்தனர்.

கேரளா மாநிலம் ஒரு படி மேலே சென்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக அவசர சட்டம் நிறைவேற்றியது. ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு பிடிக்காத எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று அமைச்சர்களும் எம்.பிக்களும் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து விரைவில் பதிலளிக்கபடும் என்றே கூறி வருகிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பலர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உரிய அனுமதியுடன் ராஜஸ்தானில் இருந்து ஒரு லாரியில் பசு மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகளை ஏற்றி வந்துள்ளனர்.

அப்போது இதைபார்த்த பசு பாதுகாவலர்கள் தமிழக அதிகாரிகளை தாக்கி லாரிகளுக்கு தீ வைக்க முயற்சி செய்தனர். மேலும் பசுக்களை மீட்டு கோசாலைகளில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அதிகாரிகள் பலமாக தாக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், நடவடிக்கை எடுக்காத 7 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.