வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருக்குமாம்...! உஷார் மக்களே...!
இந்த ஆண்டு கோடைகாலத்தின்போது, வெப்பநிலை வழக்கத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியனா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வரும் கோடை காலங்களில் வழக்கத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில், நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில், மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன் அடிப்படையில், டெல்லி, அரியனா, பஞ்சாப், ராஜ்ஸ்தான் மாநிலங்களில் வழக்கத்தைவிட வரும் கோடை காலங்களில் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், பகல் பொழுதில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர், பீகார், ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளம், தமிழகம், கர்நாடகம் மாநிலங்களில் வெப்பநிலை அரை டிகிரியில் இருந்து ஒரு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.