This is the reason for mysterious deaths of medical students
தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களில் படிப்பதை தடுக்கவே மர்ம மரணங்கள் ஏற்படுத்தப்படுகின்றன எனவும் தமிழக மாணவர்கள் மேல்நிலைக்கு வருவதைத் தடுக்க சதித்திட்டம் எனவும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர் கோவை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டெல்லியில் யூசிஎம்.எஸ் மருத்துவ கல்லூரியில் எம்.டி படித்து வந்தார்.
இவர் விடுதியில் தங்கியே படித்து வந்தார். இந்நிலையில் சரத் பிரபு நேற்று காலை கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரத் பிரபு சடலமாக கிடப்பதை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவறையில் தனக்கு தானே இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டு சரத் பிரபு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சரத் பிரபுவுடன் தங்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சரத்பிரபுவின் தலையில் ரத்த காயம் இருப்பதால் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என போலீஸ் சந்தேகம் தெரிவித்திருந்தது. தற்போது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களில் படிப்பதை தடுக்கவே மர்ம மரணங்கள் ஏற்படுத்தப்படுகின்றன எனவும் தமிழக மாணவர்கள் மேல்நிலைக்கு வருவதைத் தடுக்க சதித்திட்டம் எனவும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
